முன்னாள் தலைமைச் செயலாளர் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன் – முதல்வர்

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவை அடுத்து முதலமைச்சர் இரங்கல்.

Tamilnadu CM MK Stalin

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவை அடுத்து முதலமைச்சர் இரங்கல்.

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் (101) உடல்நல குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றிய நூற்றாண்டு நாயகர் – முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

விடுதலைக்கு முன்பான ஐ.சி.எஸ் காலத்தில் இருந்து தற்போதுள்ள ஐ.ஏ.எஸ் முறை வரை 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப்பணி வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர். ஆட்சிப்பணிக்கு வருவதற்கு இராணுவத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நேர்மையும் துணிச்சலும் முன்பாக தலைமைப் பண்பும் செயல்திறனும் ஒருங்கே அமையப்பெற்ற சபாநாயகம் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

கடந்த ஆண்டு அவரது நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவரது சிறப்புகளை எடுத்துக்கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகப்பெரும் பேறு. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி, வாழ்வாங்கு வாழ்ந்து நிறைந்துள்ள அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.