சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதியான கோவை வடக்கில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மகன் தாயின் சார்பில் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
வானதி சீனிவாசன் தனது உடல்நிலை குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:“வணக்கம். அன்பு சகோதர சகோதரிகளே. உங்களுடைய அன்பினாலும் பிரார்த்தனையாலும் விரைவாக உடலாலும் தேறிக் கொண்டிருக்கிறேன். ஒரிரண்டு நாட்களில் உங்களை நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். நம்முடைய தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்.
எனக்காக கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும், கூட்டணி கட்சியினுடைய நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.இன்று மாலை நான்கு மணிக்கு பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் பிஜேபியின் பூத் காரிகர்த்தர்களுடன் கலந்துரையாட இருக்கிறார்.
எனது பூத் வலிமையான பூத் என்கின்ற கலந்துரையாடலில் நாம் அனைவரும் நமோ app செயலி மூலம் இணைந்து அவருடன் பேசுவதும், அவர் பேசுவதைக் கேட்பதுமாக இந்த நிகழ்வை வெற்றிகரமாக மாற்ற வேண்டும். தமிழகத்தின் மீது அளப்பரிய அன்பும், தமிழகத்தினுடைய ஆற்றல் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்திருக்கிற பிரதமர் மோடி அவர்களுக்கு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியின் மூலமாக நமது அன்பினைத் தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இன்று மாலை நான்கு மணிக்கு நாம் அனைவரும் பிரதமர் மோடிஜி அவர்கள் பேசுவதைக் கேட்கக் காத்திருப்போம். நன்றி.” என தெளிவாக தெரிவித்துள்ளார். வானதி சீனிவாசன் உடல்நலம் தேறி விரைவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த விவகாரம் பாஜக மற்றும் என்டிஏ கூட்டணியினரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
unknown node