ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!
விசிக தலைவர் திருமாவளவன் எப்போதாவது ராமதாஸைப் புகழ்ந்து பேசியிருப்பாரா? என அன்புமணி காட்டத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரமும் தன்னிடமே உள்ளதாகவும், 99% கட்சியினர் தனது பக்கம் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த பாமக சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் பேசிய அவர் “காலையில் இலந்தை பழம் விற்பவரை கூட்டிவந்து பொறுப்பு கொடுங்கள் என்றால், ராமதாஸ் கையெழுத்து போடுகிறார். இதிலிருந்து அவரது சிந்தனைப்படி கட்சி நடைபெறவில்லை என்பது தெளிவு,” என அவர் கடுமையாக விமர்சித்தார்.
அன்புமணி, கட்சிக்கு எதிரான சூழ்ச்சிகளுக்கு திமுகவே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். “பாமகவைக் கைப்பற்ற திமுக சூழ்ச்சி செய்கிறது. திமுகவே பாமகவுக்கு எதிரி,” என அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ராமதாஸ் மீது திடீரென பாசம் காட்டுவதற்கு பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாகவும் அன்புமணி கேள்வி எழுப்பினார்.
“விசிக தலைவர் திருமாவளவன் எப்போதாவது ராமதாஸைப் புகழ்ந்து பேசியிருப்பாரா? காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென ராமதாஸை சந்திப்பது ஏன்? வன்னியர் அரசு, ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் ஆகியோருக்கு ராமதாஸ் மீது ஏன் திடீர் அன்பு?” என அவர் கேள்வி எழுப்பினார்.
தனிப்பட்ட முறையில், ராமதாஸின் பேச்சுகள் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக அன்புமணி உருக்கமாகக் கூறினார். “தினமும் நிம்மதி இல்லாமல், தூக்கம் இல்லாமல் உள்ளேன். பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது பொது வெளியில் விமர்சிப்பார்களா? ராமதாஸாக இருந்தால் அப்படி பேசியிருப்பாரா?” என அவர் வேதனை தெரிவித்தார்.
பாஜக கூட்டணி குறித்து
மேலும், தொடர்ந்து பேசிய அன்புமணி கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ராமதாஸின் விருப்பத்தின் பேரிலேயே நடந்ததாகவும், அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பியிருந்தால் அதையும் ஏற்றிருப்பேன் எனவும் அன்புமணி தெளிவுபடுத்தினார். ராமதாஸின் பேச்சுகள் அனைத்தும் பொய்யானவை எனக் கூறிய அன்புமணி, கட்சியின் தலைமைப் பொறுப்பு தொடர்பாக தனக்கு முழு ஆதரவு இருப்பதாகவும் பேசினார்.
இது குறித்து பேசிய அவர் ” பொதுக்குழுவை கூட்டவும், கட்சியை நடத்தவும் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பேருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதிகாரம் மிக்கவர் நிறுவனர் என்கின்ற சட்டவிதி கிடையாது” எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். ஏற்கனவே, பாமக உட்கட்சி விவகாரமானது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வரும் சூழலில், இப்போது அன்புமணி இப்படி கூறியுள்ளது இன்னும் பேசுபொருளாக வெடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக ராமதாஸ் பதில் அளிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.