என் மீது சொல்லப்பட்ட அபாண்டமான பழிகளை தட்டிவிட்டு செல்வேன் – அன்புமணி பேச்சு!
பாமகவில் நிலவும் குழப்பங்கள் முடிவுக்கு வரும் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை : நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தேன், ஆனால் அன்புமணி ஒரு நொடியில் அதை உடைத்துவிட்டார்,” என வெளிப்படையாகவே குற்றம்சாட்டி பேசியிருந்தார். எனவே, இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் மாறியது.
தந்தை வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இன்று சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில், கலந்து கொண்ட அன்புமணி தனது தந்தை ராமதாஸ், “அன்புமணி தனது தாய் மீது பாட்டிலை எறிந்து தாக்க முயன்றார்” என்று குற்றம்சாட்டியதற்கு பதிலளிக்கும் விதமாக “என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன், இந்த உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் என் அம்மாதான்” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
அது மட்டுமின்றி பேசிய அன்புமணி ராமதாஸ் ” என்னுடைய வாழ்க்கையில் நான் பல சோதனைகளை சந்தித்து இருக்கிறேன். பல அபாண்டமான பழிகளையும் சந்தித்து இருக்கிறேன். என் மீது சொல்லப்பட்ட அபாண்டமான பழிகளை தட்டிவிட்டு செல்வேன். மனதில் நிறையவே இருக்கிறது ஆனால், அதை மீடியா நண்பர்கள் முன்னிலையில் பேசமுடியாது. நிறைய நாள் நான் மன உளைச்சலில் இருந்தேன். அதில் இருந்து நேற்றுதான் எனக்கு விடுதலை கிடைத்தது. இனிமேல் நாம் வேகமாக செல்லலாம் அதற்கு நான் தயாராக இருக்கிறேன்” எனவும் பேசினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் ” நாம் அனைவரும் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். எனவே, அதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். சில குழப்பமான விஷயங்கள் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. இது அனைத்தும் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தான். எனவே, விரைவில் இது சரியாகிவிடும்…நாங்கள் சரிபடுத்திவிடுவோம்” எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.