ஜெயிலர் டிக்கெட்டை இலவசமாக வழங்கி அதிமுக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த கடம்பூர் ராஜு!

மதுரையில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை அழைக்கும் விதமாக நூதன முயற்சியில் ஈடுபட்ட கடம்பூர் ராஜு.
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். இதனால் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு ரஜினி ரசிகர்களை அழைப்பு விடுக்கும் வகையில், கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் காலை காட்சியை மொத்தமாக முன்பதிவு செய்துவிட்டு, படம் பார்க்க வருபவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.