புதிய தரவு அலகு மையம் தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramaniam inaugurates new data center for Indian medicine and homeopathy

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் புதிய தரவு அலகு மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் புதிய தரவு அலகு மையத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சார்பில் சிறப்பு ‘டேட்டா செல்’ என்ற செயலியும் தொடங்கப்பட்டது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனைகளில் உள்ள நிலவரங்களை டேட்டா செல் ஆப் மூலம் அறிய முடியும்.

புதிய தரவு மையத்தின் மூலம் தமிழ்நாட்டு சித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவ துறையுடன் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான அலுவலகத்தை 10 நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

தமிழ்நாட்டில் அமையவுள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இந்த பணிகள் முடிக்கப்படும் என்றும் இந்தியாவுக்கு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

மே மதத்துக்கு பிறகு 77 இடங்களில் சித்த மருத்துவ கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டன என்றும் கூறினார். முதல் மற்றும் 2வது கொரோனா அலையின்போது இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு முழுவதும் 97 பேருக்கு ஓமைக்ரான் அறிகுறி உள்ளது. ஓமைக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓமைக்ரான் பரிசோதனை முடிவுகள் மத்திய அரசிடம் இருந்து வருவது தாமதமாகிறது என்றும் தெரிவித்துள்ளார். டிசம்பர் 31ம் தேதி மீண்டும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பிறகு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.