என்எல்சி விவகாரம்: நாளை பாமக முற்றுகை போராட்டம்!

Anbumani ramadoss

என்எல்சி விவகாரம் தொடர்பாக நாளை பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என பாமக அறிவிப்பு.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை நேற்று காலை என்எல்சி நிர்வாகம் தொடங்கியது. அதன்படி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி துவங்கியது.

விளை நிலங்கள் மீது பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் முயற்சிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக குற்றம்சாட்டினர். இதனால் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே கையகப்படுத்தப்பட்ட நிலம். 2006-2013 காலகட்டத்திலேயே என்எல்சி நிர்வாகத்தினால் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக சுரங்க விரிவாக்க பணிகள் நடைபெறாமல் இருப்பதால் விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர். தற்போது மின்தட்டுப்பாடு நிலவி வருகிறது. என்எல்சியிடம் நிலக்கரி எடுக்க நிலம் இல்லை. தற்போது அதற்கான வேலைகளை என்எல்சி ஆரம்பித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

கூடுதல் கருணை தொகையும், பயிர் இழப்பீடு தொகையும் வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து போராட்டங்களை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், என்எல்சி விவகாரம் தொடர்பாக நாளை பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாளை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். விளைநிலங்களை அழித்தால் வருங்காலத்தில் உணவு கிடைக்காது. என்எல்சி இழப்பீடாக ரூ.1 கோடி கொடுத்தாலும் தேவையில்லை. மின்சாரம் எடுக்க பல வழிகள் உள்ளன, உணவு உற்பத்திக்கு விவசாயம் மட்டுமே உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், ஒரு பிடி மண்ணைக் கூட என்எல்சிக்கு கொடுத்திருக்க மாட்டோம் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்