“என்னை யாரும் சந்திக்க வேண்டாம்” நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு போட்ட அன்புமணி!
நான் அழைக்கும் வரை நிர்வாகிகள் காத்திருக்க வேண்டும் எனவும் அன்புமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சமீபத்திய கூட்டங்களை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்து வந்தது ஏற்கனவே பேசுபொருளாகி இருந்த நிலையில், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ஒன்றாக இணைவோம் என கௌரவத்தலைவர் ஜிகே மணி தெரிவித்திருந்தார்.
ஆனால், இன்று நடந்த சம்பவத்தை வைத்து பார்க்கையில் மீண்டும் பாமக பழையபடி இருக்குமா என்கிற அளவுக்கு கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால், இன்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “50 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தேன், ஆனால் அன்புமணி ஒரு நொடியில் அதை உடைத்துவிட்டார்,” என குற்றம் சாட்டினார்.
அது மட்டுமின்றி, புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்டது யார்? முகுந்தனை இளைஞரணி செயலாளராக நியமித்தபோது மேடையிலேயே மைக்கை தூக்கி வீசியது சரியான செயலா? என கேள்விகள் எழுப்பியதோடு பொய்யை மூச்சு விடாமல் பேசுபவர் அன்புமணி, அவர் கூறிய பொய்யை நம்பி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. கட்டுக்கோப்பாக நடத்தி வந்த கட்சியை அன்புமணி அவமானப்படுத்தி விட்டார் எனவும் வெளிப்படையாகவே ராமதாஸ் பேசியிருந்தார்.
இந்த சூழலில், பாமக விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக வெடித்திருக்கும் நிலையில், நிர்வாகிகளுக்கு அன்புமணி முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அது என்னவென்றால், பா.ம.க.வினர் யாரும் தற்போது தன்னை சந்திக்க சென்னை அக்கரை வீட்டிற்கு வர வேண்டாம் எனவும் நான் அழைக்கும் வரை நிர்வாகிகள் காத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.