கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!
கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல்ஹாசன் பேசிய நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேசியிருக்கிறார்.

கர்நாடகா : ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது எனக் கூறினார். இதனை தொடர்ந்து கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும் போது கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தார். இது தற்போது கன்னட அமைப்புகளிடம் இருந்து கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது. கன்னட அமைப்பினர் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பான் இந்தியன் படமான ‘தக் லைஃப்’-க்கு இது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், கன்னட மொழி சர்ச்சையில் அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கமல் தெரிவித்தார். தனது தரப்பில் இருந்து பார்க்கும் போது, தான் கூறியது சரியே எனவும், எதிரிலிருந்து பார்த்தால் அது தவறாக தெரியலாம் எனவும் அவர் கூறினார். மேலும், அரசியல்வாதிகளுக்கு மொழி குறித்து பேச எந்த தகுதியும் இல்லை என்று கூறிய கமல், ‘தன்னையும் சேர்த்து அரசியல்வாதிகளுக்கு மொழி குறித்து பேச போதிய அறிவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தற்பொழுது, நடிகர் கமல்ஹாசன் பேசியிருந்ததற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் பதில் கொடுத்துள்ளார். கமலுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய சிவராஜ்குமார்,” கமல் சார் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. அவருக்கு தான் என்ன சொன்னோம் என்று நன்றாகவே தெரியும், உரிய பதிலையும் அவர் சொல்வார்.
கன்னடம் மீது அன்பை வெளிப்படுத்துபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களில் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் அதை வெளிப்படுத்த வேண்டும். கன்னட திரைத்துறையிலேயே புதுமுகங்கள் வந்தால் அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை. பெரிய ஸ்டார்களின் படங்கள் வரும்போது மட்டும் பேசுவது சரியில்லை.
நான் கன்னடத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன். கமலை கண்டிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? பிரச்சினை வரும்போது மட்டும் பேசாமல், கன்னட மொழியை ஊக்குவிக்கவும் பணியாற்ற வேண்டும். நட்சத்திர படங்களை மட்டும் ஆதரிக்காமல் புதியவர்களையும் ஊக்குவிக்க வேண்டும” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.