அதிமுக பெயர், சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்று வழக்கறிஞர் இன்பதுரை பேட்டி.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து, இரட்டை சின்னத்தையும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக மாநிலம் சட்டப்பேரவையில் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிடலாம். மறுபக்கம், இரட்டை இலை இபிஎஸ் வசமான நிலையில், ஓபிஎஸ் தனி சின்னத்தில் நிற்கும் சூழல் உள்ளது.
இதில், குறிப்பாக பொதுக்குழு தீர்மானங்கள், அதிமுகவில் விதி மாற்றம், நிர்வாகிகள் நீக்கம் உள்ளிட்டவைகளையும் தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதால், ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவாக உள்ளது. எனவே, ஓபிஎஸ்-யின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், திருச்சியில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் அதிமுக பெயர், சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்றும் மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். இதுபோன்று, அதிமுக பெயரை வேறு யாரும் பயன்படுத்தினால் கிரிமினல் கேஸ் போடுவோம் எனவும் அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.