கொடி நாள் நிதியாக 1 லட்சம் வழங்கிய மக்கள் நீதி மய்யம்.!

Kamal Haasan said he had issued a check of Rs 1 lakh on behalf of the People's Justice Center as a flag fund.

கொடிநாள் நிதியாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் 1 லட்சம் காசோலை வழங்கினேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

கொடி நாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.

இந்த ஆண்டும் டிசம்பர் 7-ம் தேதியை மத்திய-மாநில அரசுகள் கொடி நாளாக கடைபிடித்து வருகின்றனர். பிரதமர் முதல் தமிழக முதல்வர் வரை பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கொடி நாள் நிதியாக 1 லட்சம் வழங்கியுள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நம் தேசத்தின் எல்லைகளைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் கொடிநாள் நிதியாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ரூ.1,00,000/- காசோலை வழங்கினேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே, கொடிநாள் 2019ம் ஆண்டுக்கு, ஒரு கோடியே, 69 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதில், 93 லட்சத்து, 19 ஆயிரம் ரூபாய் வசூல் எட்டியுள்ளது. நடப்பு ஆண்டு 2020, ஒரு கோடியே, 69 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node