பாமக நிர்வாகி நீக்கம்..தலைவராக ஜோசுவா நியமனம்! ராமதாஸ் அதிரடி
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக ஜோசுவா என்பவரை பாமக நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார்.

செங்கல்பட்டு : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை போல பரவி வருகிறது. ஏனென்றால், நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.அவர் பேசியதாவது ” 50 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தேன், ஆனால் அன்புமணி ஒரு நொடியில் அதை உடைத்துவிட்டார்.
அது மட்டுமின்றி வளர்த்த கடா மார்பில் எட்டி உதைப்பதுபோல் அன்புமணி உதைத்துவிட்டார், தன் தாயின் மீதே பாட்டிலை தூக்கி அடித்தவர் அன்புமணி ” எனவும் வெளிப்படையாகவே பேசினார். எனவே, பாமக விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.
இப்படியான சூழலில், இன்று தந்தை வைத்த விமர்சனங்களுக்கு அன்புமணி இன்று சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கும் வகையிலும் பேசியிருந்தார். ஒரு பக்கம் இவர் பேச மற்றோரு பக்கம் ராமதாஸ் கட்சியில் ஏற்கனவே இருக்கும் மாவட்டச் செயலாளர்களை நீக்கி புதிய நபர்களை நியமனம் செய்து அறிவித்து வருகிறார்.
உதாரணமாக, பாமகவின் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மயிலம் சிவகுமாரை பொறுப்பில் இருந்து நீக்கி அவருக்கு மாற்றாக புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றையும் ராமதாஸ் வெளியிட்டு இருந்தார். அவருடைய அந்த செயலுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி பேசியிருந்தார்.
கூட்டத்தில் பேசிய அன்புமணி ” பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட தலைவர், பொருளாளரை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பாமக பொதுக்குழு உறுப்பினர்கள் நினைத்தால் மட்டுமே நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ முடியும். வேறு யாராலும் இதை செய்ய முடியாது. இதுதான் நம்முடைய கட்சியின் விதி
பாமகவின் பொதுக்குழுவால் நான் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டோம். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சித்தலைவர் மட்டுமே நிர்வாகிகளை மாற்ற முடியும். நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக எனது கடிதம் மட்டுமே செல்லும்” எனவும் திட்டவட்டடமாக தெரிவித்திருந்தார்.
அவர் அப்படி பேசியபிறகும் பாமக நிறுவனர் ராமதாஸ் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக இருந்த பச்சையப்பனை நீக்கி புதிய மாவட்ட தலைவராக ஜோசுவா என்பவரை நியமித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே 4 மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாவட்ட செயலாளரை ராமதாஸ் நீக்கியுள்ளார். எனவே, இது பாமக உட்கட்சி விவகாரத்தில் மேலும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.