மாறியது பாமக அலுவலக முகவரி…அன்புமணி ராமதாஸ் அதிரடி!
அன்புமணி ராமதாஸ் பாமக அலுவலகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி. நகருக்கு மாற்றியுள்ளார்

சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை போல பரவி வருகிறது. ஏனென்றால், நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
இப்படியான சூழலில், இன்று தந்தை வைத்த விமர்சனங்களுக்கு அன்புமணி இன்று சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கும் வகையிலும் பேசியிருந்தார். ஒரு பக்கம் இவர் பேச மற்றோரு பக்கம் ராமதாஸ் கட்சியில் ஏற்கனவே இருக்கும் மாவட்டச் செயலாளர்களை நீக்கி புதிய நபர்களை நியமனம் செய்து அறிவித்து வருகிறார்.
எனவே, இது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காகவும் வெடித்துள்ளது. இந்த சூழலில், பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு மாற்றியுள்ளார். இந்த மாற்றம் கட்சியின் நிர்வாக முடிவாக எடுக்கப்பட்டுள்ளது. புதிய அலுவலகம் தி.நகர், திலக் நகர் தெருவில் அமைந்துள்ளது.
இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், பாமக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் புதிய முகவரி இடம்பெற்றுள்ளது. முன்பு தேனாம்பேட்டை முகவரி இடம்பெற்றிருந்த படிவத்தில், தற்போது தி.நகர் திலக் நகர் தெருவில் உள்ள புதிய முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலக மாற்றம், கட்சியின் செயல்பாடுகளை மேலும் திறம்பட நிர்வகிக்கவும், உறுப்பினர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கவும் உதவும் என பாமகவினர் எதிர்பார்க்கின்றனர்.