வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramaniam told reporters that he was ready to issue a white paper.

வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கொரோனா மற்றும் தடுப்பூசி பணி குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் பெறுவதற்காக நாளை மறுநாள் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவிக்கிறேன். இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன் என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ஒரு தடுப்பூசியை பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டு செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லிக்கு சென்று தமிழகத்திற்கு போதிய கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும் படி கோரிக்கை வைக்கவுள்ளனர்.