“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!
சாம்சங் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏற்கனவே 30 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் தற்போது இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு ஏற்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தால் எழுப்பப்பட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் சாம்சங் இந்தியா நிர்வாகத்தினர் மற்றும் CITU தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
இதில், இருதரப்பும் ஏற்றுக்கொண்டவாறு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, தொழிலாளர்களுக்கு 2025-26 ஆம் ஆண்டில் ரூ.9000, 2026-27 மற்றும் 2027-28 ஆண்டுகளுக்கு தலா ரூ.4500 வீதம் 3 ஆண்டு காலத்திற்கு ரூ.18000 நேரடி சம்பள உயர்வு கிடைக்கும்.
அனுபவத்தின் அடிப்படையிலான சிறப்பு ஊதிய உயர்வு 3 ஆண்டு காலங்களில் ரூ. 1000 முதல் ரூ.4000 வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கும்; ஒருமுறை சிறப்பு பதவி உயர்வாக 31.03.2025 தேதியில் 6 வருடங்கள் முறையான பணி நிறைவு செய்து பதவி உயர்வு கிடைக்காத தொழிலாளர்களுக்கு சிறப்பு பதவி உயர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.