“ஐயா நல்ல செய்தியை சீக்கிரம் சொல்லுவாங்க..”- ஜி.கே.மணி பேச்சு!
ராமதாஸ்-அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும் என பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது. இது இன்னும் பேசுபொருளாகும் நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,” நான் சென்னைக்கு என்னுடைய சொந்தங்களை பார்ப்பதற்காக செல்கிறேன். குழந்தைகள், பேரன், கொள்ளு பேரன் ஆகியோரை பார்க்க செல்கிறேன்.
மீண்டும் திங்கள்கிழமை வருகிறேன். அதன்பிறகு செவ்வாய்கிழமை உங்களை சந்திக்கிறேன். முடிந்துபோன விஷயங்களை பேச வேண்டாம், இனி நடக்கப் போவதை பேசுவோம், பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு ஏற்படும். கூட்டணி பற்றிப் பேசி முடிவு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை எனவும் சென்னைக்கு வந்திருக்கிறீர்கள் அன்புமணியை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் பதில் அளித்த ராமதாஸ் ” இல்லை நான் சந்திக்கபோறது இல்லை” என பதில் அளித்தார்.
எனவே, பாமக விவகாரம் இன்னும் முடியாத நிலையில் மற்றொரு பக்கம் பாமக, அதிமுக-பாஜக கூட்டணியில் இணையுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த ஜி.கே.மணி ” அய்யா சொல்லும் செய்தி மக்களுக்கு நன்மை தரும். விரைவில் அந்த மாதிரி செய்தியை அவரே தெரிவிப்பார்” என டிவிஸ்ட் வைத்து பதில் அளித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பிரச்னைக்கு மத்தியில் இருவரும் சந்தித்தது என்பது நல்ல விஷயம் தான். இருவரும் சந்தித்து சமீபத்தில் 45 நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள். மரியாதை நிமித்தமாகத்தான் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தார். ராமதாஸ்-அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும். விரைவில் நல்ல செய்தி வரும்” எனவும் ஜிகே மணி தெரிவித்தார்.
இதற்கிடையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் அவரது மூத்த மகள் காந்திமதியும் பேரன் முகுந்தனும் சந்திப்பு நடத்தியுள்ளார். முகுந்தன் விவகாரம் குறித்த கேள்விக்கு முடிந்துபோன விஷயம் என ராமதாஸ் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.