போலீஸ் அடித்து மாணவர் மணிகண்டன் இறக்கவில்லை – ஏடிஜிபி விளக்கம்

ADGP Thamaraikkannan explained that it has been confirmed that Manikandan was not beaten to death by the police.

போலீஸ் அடித்து மணிகண்டன் இறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம்.

முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் டிசம்பர் 4-ம் தேதி மாலை பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட அப்பகுதி போலீஸார் மணிகண்டனின் வாகனத்தை நிறுத்த முயன்றனர்.

ஆனால் மணிகண்டன் நிற்காமல் சென்றதால், விரட்டிச் சென்று பிடித்தனர். அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்த பின்னர் தாயாரை வரவழைத்து மணிகண்டனை அனுப்பி வைத்தனர். இதன்பின் மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, மணிகண்டனின் உறவினர்கள், கிராமத்தினர் போலீஸார் தாக்கியதில்தான் மணிகண்டன் இறந்தார் எனக் கூறி போராட்டங்கள் நடத்தப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டது. இதற்கு சில அரசியல் தலைவர் உள்ளிட்டோரும் வெளிப்படையான விசாரணை மூலம் நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) தாமரைக்கண்ணன், ராமநாதபுரம் மாணவர் மணிகண்டன் விஷமருந்தி இறந்துள்ளார். மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனை 2 மருத்துவர்களை வைத்து செய்யப்பட்டது. மறுபிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மணிகண்டன் விஷம் அருந்தி இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் மணிகண்டனிடம் போலீசார் விசாரித்தனர்.  வாகனம் தொடர்பான ஆவணங்கள் ஏதும் மணிகண்டனிடம் இல்லை. மணிகண்டன் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது.  காவல்துறை தாக்கியோ, அடித்தோ மணிகண்டன் உயிரிழக்கவில்லை. காவல்துறை தரப்பில் முழுமையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என விளக்கமளித்தார்.