சென்னை : தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் (H1N1) பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் வெறும் 19 ஆக இருந்த இந்தத் தொற்று பாதிப்பு, தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக லேசான சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், பொதுமக்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்றின் பொதுவான அறிகுறிகளாக திடீரென ஏற்படும் அதிகப்படியான காய்ச்சல், தொடர் இருமல், தொண்டை வலி, கடுமையான உடல் சோர்வு மற்றும் தசை வலி போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுடன் கடுமையான தலைவலி மற்றும் குளிர் நடுக்கம் போன்ற உபாதைகளும் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகளும் இருக்கக்கூடும் என்பதால் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சிலருக்கு ஆபத்தான தீவிர அறிகுறிகள் வெளிப்பட வாய்ப்புள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுவது, நெஞ்சு அல்லது வயிற்றில் தீராத வலி மற்றும் அழுத்தம் இருப்பது, திடீர் மயக்கம், குழப்பமான மனநிலை அல்லது மந்தமான போக்கு மற்றும் தொடர்ச்சியான வாந்தி போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
குறிப்பாக, குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல், உதடுகள் அல்லது முகம் நீல நிறமாக மாறுதல், வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருத்தல் மற்றும் திரவ ஆகாரங்களை கூட உட்கொள்ள மறுத்தல் போன்ற ஆபத்து அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.
தற்போதைய சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளப் பல்வேறு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; ஒருவேளை செல்ல நேர்ந்தால் கட்டாயமாக N95 அல்லது தரமான முகக்கவசங்களை அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு குறைந்தபட்சம் இருபது விநாடிகள் நன்றாகக் கழுவ வேண்டும் அல்லது கிருமிநாசினி சானிடைசரைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும், இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரைக் கொண்டு வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
உடலில் நீர்ச்சத்தைப் பேணிக் காப்பது மிக முக்கியமானதாகும். எப்போது காய்ச்சிய நீரை அருந்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியைத் இயற்கையாகவே அதிகரிக்கும் சத்தான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக, காய்ச்சல் வந்தவுடன் மருந்துக்கடைகளுக்குச் சென்று தாமாகவே மாத்திரை வாங்கிச் சாப்பிடும் சுய மருத்துவப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தாலோ அல்லது உடல்நிலை மேலும் மோசமடைவது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ, சற்றும் தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். H1N1 வைரஸ் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், அதனை எளிதில் முழுமையாகக் குணப்படுத்திவிடலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
