வரும் 12 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு 15 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தர மத்திய அரசு உறுதி – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்...!

The Central Government has promised to provide 15,87,580 doses of vaccines to Tamil Nadu by the 12th - people Welfare Secretary Radhakrishnan

தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 வது அலையானது கடந்த இரண்டு மாதங்களாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எண்ணம் தற்போது அதிகரித்துள்ளது.

இதனால்,போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாமல், பல மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்காக,தமிழக அரசானது,மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்துவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,டெல்லி சென்றுள்ளார்.

அதன்படி,மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து பேசிய பின்னர் ராதாகிருஷ்ணன் அவர்கள்,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் முதல் 8 லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கான கட்டமைப்பு உள்ளது.தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் 2 கோடி தடுப்பூசிகள் வழங்குவது,11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது,கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் குறித்தும்,கொரோனா 3 வது அலையை சமாளிக்க  ரூ.1,624 கோடி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

அதன்படி,வரும் 12 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு 15,87,580 டோஸ் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு உத்திரவாதம் அளித்துள்ளது.

அதேபோல,கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.23,123 கோடியில் கணிசமான தொகையை தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.இதனையடுத்து,குழந்தைகள் சிகிச்சை வார்டுகளை 20 சதவிகிதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும்,எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசுகையில்,அதனை வேறு இடத்தில் தற்காலிகமாக தொடங்க முடியுமா? என பார்க்கப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது”, என்று கூறினார்.