#Breaking:ஓபிசி 27 % இட ஒதுக்கீடு அனுமதி – உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!

The Chennai High Court has reported that 27% reservation allowed for the other backward classes in medical studies in medical courses.

மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

மேலும்,இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, அது தொடர்பான விசாரணையின் போது, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்குவதற்கான எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை என மத்திய அரசு பதில் மனு அளித்தது.

இதனால்,உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் வழக்கியது. இதனையடுத்து,பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான ஒதுக்கீட்டால் ஓபிசி பிரிவுக்கு பாதிப்பில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கிடையில்,அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில்,இதர பிறப்டுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி,மாநில அரசுகள் நடத்தி வரும்  மருத்துவ கல்லூரிகளில் ஆல் இந்தியா கோட்டா என்ற பிரிவில் ஓபிசிக்கு 27 % ,பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கடந்த மாதம் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில்,மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(ஓபிசிக்கு) 27 % இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது .மேலும்,பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து,திமுக தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.