5 சவரன் வரை நகைக்கடன் விவரங்கள் சேகரிப்பு – தமிழக அரசு உத்தரவு...!

The Government of Tamil Nadu has directed the Co-operative Societies to collect the details of those who have mortgaged up to 5 savaran gold

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானம் வைத்துள்ளவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைத்த பிறகு முதன்முதலில் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது,கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.ஆனால்,நகைக்கடன் குறித்து பேசுகையில்:” நகைக் கடன்களைப் பொறுத்தவரை ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம், தூய்மை ஆகியவை சரியாகக் கணக்கிடப்படவில்லை. எனவே,நகைக்கடன் தள்ளுபடியைத் தொடர்ந்து அனுமதிப்பதால் தவறு செய்பவர்கள் பலரும் பலனை பெறக் கூடிய வாய்ப்புகள் நிகழும். எனவே இந்த முறைகேடுகளைத் திருத்தி, தீர ஆராய்ந்து இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

இதுபோன்ற இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும் இதே நிகழ்வு பொருந்தும் என்பதால் அதுகுறித்து உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி குறித்து இந்த முடிவு எடுக்கப்படும். அப்போதுதான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர்”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானம் வைத்துள்ளவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,பயனாளிகளின் KYC ஆவணங்கள் மற்றும் குடும்ப அட்டை விபரங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும்,மேலும்,வருகின்ற 16 ஆம் தேதிக்குள் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானம் வைத்துள்ளவர்களின் விபரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அளிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர்கள் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.