Made in India போல் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும்.. இதுவே எங்கள் லட்சியம் – முதல்வர்

The voice of ‘Made in TamilNadu’ should be heard all over the world like ‘Made in India’, said the Chief Minister at the Tamil Nadu Export Conference.

‘Made in India’ என்பது போல, ‘Made in TamilNadu’ என்ற குரல் உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும்’ என தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில் முதல்வர் உரை.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்ற ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டில் ரூ.2,120.54 கோடி மதிப்பீட்டில் 41,695 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 24 தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இதனைத்தொடர்ந்து, 21 ஏற்றுமதி, ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்களின் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், தமிழகத்தில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டை முதலமைச்சர் வெளியிட்டார்.

இதன்பின் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “Made in India என்பது போல் உலகின் மூலை முடுக்கெல்லாம் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்கள் ஆசை, லட்சியம், அந்த லட்சியத்தை நோக்கி எங்கள் பயணம் நிச்சியமாக அமைந்துவிடும் என்று பெருமிதம் தெரிவித்தார்.

திருவள்ளூரில் அமையவிருக்கும் கார் உதிரி பாகத் தயாரிப்புத் தொழிற்சாலை மூலம் சுமார் 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உலகமே முழுக்க நாம் செல்ல வேண்டும், உலகமே தமிழகத்தை நோக்கி வந்தாக வேண்டும். தமிழக தொழில் துறையின் உள்ளங்கையில் உலகம் இருக்க வேண்டும் என கூறிய முதல்வர், இந்திய அளவில் ஏற்றுமதியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்திய அளவில் ஏற்றுமதியில் ஏற்றம் பெற்று தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் என்றும் தமிழகத்தின் கலாசாரம் மற்றும் அடையாளமாக உள்ள பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறிய முதல்வர்,  இதுபோன்ற மாநாடுகளும், கண்காட்சிகளும் தமிழகத்தில் அதிகளவில் நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.