நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் போட்டியிட தடை இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

State Election Commission explains that Co-operative Union President and Co-operative members are not barred from contesting local elections.

கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டிமிடுவதற்கான தகுதி மற்றும் தகுதியின்மையில் கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் போட்டியிடுவது குறித்து ஏதும் வரையறை செய்யப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டக்கூறு 12-ல் “மாநிலம்” என்ற வரையறைக்குள் கூட்டுறவு சங்கங்கள் கொண்டு வரப்படாததால் கூட்டுறவு சங்க அலுவலர்கள் அல்லது மாநில அரசின் கட்டுப்பாட்டில் அல்லது மாநில அரசுக்கு உட்பட்ட பெருநிறுவனத்தைச் சார்ந்த அலுவலர்கள் அல்லது பணியாளர்களாக கருத இயலாது.

உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மக்கள் பிரதிநிதிகளாவர். கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் தொடர்புடைய சங்கத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆவர். கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்களாக பொறுப்பு வகிக்கும் நபர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் நேர்வில் அவர் மக்கள் பிரதிநிதியாக இரண்டு பதவிகளில் பொறுப்பு வகிப்பதாக கருத இயலாது.

எனவே, கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இல்லை என்றும் ஓய்வூதியதாரர்கள், அரசின் உதவித் தொகை பெறுபவர்களும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இல்லை எனவும் மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.