இனியசெய்தி: 84 வயது மூதாட்டி உட்பட 3 பேர் குணமடைந்தனர்.!

தமிழகத்தில் நேற்று மேலும் 77 பேருக்கு கொரோனா உறுதியானதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்தார்.
மேலும் நேற்று தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்றுவரை 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 84 வயது மூதாட்டி குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த மூதாட்டி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 08-ம் தேதி 74 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று உறுதியாகி முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.