தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டண உயர்வு அமல்.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், சுங்க கட்டண உயர்வால் காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியிருந்தது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்பட்டது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமல்லாமல், சுங்க கட்டண உயர்வால் தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கசாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. சுங்கக்கட்டணம் உயர்வு ரூ.10 முதல் ரூ.60 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, காருக்கு ரூ.60 லிருந்து ரூ.70 ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105 லிருந்து ரூ.115 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.2025 லிருந்து ரூ.240 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.