மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கும்பகோணத்தில் சுவாமி மலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், அதிமுகவின் நிலைப்பாடு என்பது பணமும், பதவியும் தான். சனாதனம், சமூக நீதி பற்றி அவர்களுக்கு தெரியாது என அதிமுகவின் நிலைப்பாடு சனாதனமா? சமூகநீதியா என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
அதிமுகவின் தற்போதைய ஒரே பலம் இரட்டை இலை சின்ன, அதை மக்கள் மன்றம் மூலம் மீட்போம் என்றும் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் எடப்பாடி இருக்கும் அணியில் நாம் இருக்க வேண்டுமா என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இரண்டு கூட்டணிகள் மீதும் அதிருப்தி இருப்பதால் தனித்து களமிறங்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தான் முடிவெடிக்க முடியும். நாங்கள் ஏற்கெனவே தனித்து நின்றவர்கள் தான். இந்த முறை அதிமுக மற்றும் திமுகவிற்கு மாற்றாக அமமுக இருக்கும் என்பதை உணர்ந்து மக்கள் எங்களுக்கு வாய்ப்பளிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம் என்றார். டிடிவி கருத்தை பார்த்தால் இந்த முறை மக்களவைத் தேர்தலில் அமமுக தனித்து களம் காண்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
