”கொள்ளையடித்த பணத்தை வண்டி வண்டியா கொட்ட போறாங்க” – தவெக தலைவர் விஜய்.!
அனைவரும் தங்களது ஜனநாயக கடமையைச் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தலில் வாக்கு செலுத்த யாரும் பணம் பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று வருகிறது.10, 12-ம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், ”உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள். அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதன்படி வழிநடத்துங்கள் என்று பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி
பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் கூட, சாதிசாயம் பூசுவதுபோல் ஒரு கேள்வியை கேட்டுள்ளார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். சாதி, மதம் பார்த்து விவசாயிகள் பொருட்களை விளைவிப்பதில்லை, போதைப்பொருட்களை அறவே ஒதுக்கி வைப்பதுபோல் சாதி, மதங்களை ஒதுக்க வேண்டும்.
நீட் மட்டும்தான் உலகமா?
“நீட் மட்டும்தான் உலகமா? நீட்டைத் தாண்டி இன்னும் நிறைய இருக்கிறது” என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். அதில் நீங்க சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கு. படிப்பில் சாதிக்க வேண்டும்தான், படிப்பும் சாதனைதான். அதை மறுக்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு படிப்பில் மட்டும் சாதிக்க வேண்டும் என நினைப்பது சாதனை கிடையாது. படிக்கும் போது ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை. படிப்பு முக்கியம்தான், ஆனால் மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கொள்ளையடித்த பணம்
தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம். 2026 தேர்தலில் பணத்தோடு வருவார்கள், அது மக்களிடம் கொள்ளையடித்த பணம் தான், அதை வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்ட போறாங்க என்றும் தெரிவித்தார். ஓட்டுக்கு பணத்தை கொட்டும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றும் எனக்கு தெரியும். தேர்தலில் ஜனநாயக கடமையை அனைவரும் ஆற்ற வேண்டும். இதனை பெற்றோர், இளம் தலைவர்களும் (மாணவர்கள்) பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.