“ஐயா தான் நமக்கு குலசாமி, குல தெய்வம்” – ராமதாஸை புகழ்ந்து பேசிய அன்புமணி.!
புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிற்கு தொடர்புகொண்டால் பீகாருக்கு அழைப்பு போகிறது பாமக தலைவர் அன்புமணி மனம் நொந்து பேசியிருக்கிறார்.

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிய ராமதாஸ், கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வருகிறார். அதே சமயம் சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய அன்புமணி, நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது நானே? என கூறி வருகிறார்.
இந்த நிலையில், சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் உடனான 2ம் நாள் ஆலோசனை கூட்டத்தில் உரையாடி வரும் அன்புமணி, ”மாமல்லபுரம் பாமக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம், கட்சியில் சேர பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். உரிமைகளை மீட்க விரைவில் நடைபயணம் மேற்கொள்வேன், உண்மையான உறுப்பினர்கள் எனக்கு வேண்டும். இது நமது கட்சி, நமது எதிர்காலம் என செயல்படுங்கள்.
பாமகவை மேலும் வலுப்படுத்த புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஏற்கனவே உறுப்பினர் அட்டை வைத்துள்ளவர்க புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதிக உறுப்பினர்களைச் சேர்த்தால் தங்க மோதிரமோ, தங்கச் சங்கிலியோ தர மாட்டேன், உண்மையான உறுப்பினர்களை மட்டும் சேர்த்தால் போதும். கடந்த காலங்களில் நிறைய அனுபவித்துவிட்டேன், புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிற்கு தொடர்புகொண்டால் பீகாருக்கு அழைப்பு போகிறது.
ராமதாஸ் எங்கள் குலசாமி, குலதெய்வம். பாமக நிறுவனர் ராமதாசின் கொள்கையை கடைபிடிப்போம்” என்று ராமதாஸை புகழ்ந்து அன்புமணி பேசியிருக்கிறார். பாமகவின் தலைவர் நான். கொள்கை வழிகாட்டி ராமதாஸ், அவரது வழியை பின்பற்றி வெற்றி பெறுவோம். நாம் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம், இவர்களா? அவர்களா? என குழப்பமடைய வேண்டாம்” என்று கூறியுள்ளார்.