சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசியது இந்திய அளவில் சர்ச்சையாகி உள்ளது. அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதுமட்டுமில்லாமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில், சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வழக்கறிஞர்கள் ஹரிஷ் குப்தா மற்றும் ராம்சிங் லோகி ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது 2க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்கா கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
