கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு சென்றுள்ளார்.அங்கு அவர் பேசுகையில்,கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழக அரசு சார்பில் அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பீகாரில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.