தமிழகத்தில் காவிரி பிரச்னையை கூட காங்கிரஸால் தீர்த்து வைக்க முடியவில்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை இரண்டுகட்டமாக தினகரன் வெளியிட்டார்.
அதேபோல் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.
இந்நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் பெரம்பலூர் அமமுக வேட்பாளர் ராஜசேகரனுக்கு ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், சசிகலாவுக்கு துரோகம் செய்த ஓபிஎஸ், ஈபிஎஸ் தற்போது ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளனர் .தமிழகத்தில் மோடி அல்ல, அவரது டாடியே வந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்றும் கரூர் தொகுதி முன்னேற்றத்திற்காக தம்பிதுரை எதையும் செய்யவில்லை. தமிழகத்தில் காவிரி பிரச்னையை கூட காங்கிரஸால் தீர்த்து வைக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.