இரட்டை முகக்கவசங்கள் அணியுங்கள்...! வீடியோ மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு...!

Chief Minister MK Stalin has posted an awareness video on his Twitter page.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கொரோனா என்கின்ற பெருந்தொற்று காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். முடிந்தவரை வீட்டிற்குள் இருங்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளியே சென்றாலும், தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். இந்த தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மிகவும் அவசியமான முக கவசம்.

முககவசம் இன்று மனிதர்களுக்கு உயிர்க்கவசம் ஆக மாறியுள்ளது. எனவே இந்த கவசத்தை அனைவரும் அணிந்து கொள்ளுங்கள். முகத்தை முழுமையாக வாய், மூக்கு மூடி இருக்குமாறு போட்டுக்கொள்ளுங்கள். அதே போன்று மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் மருத்துவமனைகளிலும், பேருந்துகளில் பயணிக்கும் போது, தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணியாற்றும் போது இரண்டு முக கவசம் அணிவது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது தடுப்பூசி. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்  உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கவும் மீட்கவும் இருக்கிற மிக முக்கியமான கவசம்தான் தடுப்பூசி.

தடுப்பூசி போடுவதை தமிழக அரசு ஒரு இயக்கமாகவே நடத்தி வருகின்றது. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்த தயக்கமும் வேண்டாம். முகக் கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆகிய மூன்றின் மூலமாக தொற்றிலிருந்து குடும்பத்தையும் காப்பாற்றி கொள்ளலாம். வருமுன் காப்போம். கொரோனா இல்லா தமிழகம் அமைப்போம் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

unknown node