காணாமல் போன இந்தோனேஷிய நீர்மூழ்கி கப்பலில் இருந்த 53 பணியாளர்களும் உயிரிழப்பு!

All 53 crew members aboard an Indonesian submarine that went missing during training have been reported dead.

பயிற்சியின் போது காணாமல் போன இந்தோனேசியாவை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்த 53 ஊழியர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள கே.ஆர்.ஐ – 402 எனும் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாயமாகியது. கடந்த 30 ஆண்டு காலமாக கடற்படையில் சேவையாற்றி வரக்கூடிய இந்த கப்பல் இராணுவத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றிற்காக கடலில் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. பயிற்சி நேரத்தின் போது அந்த கப்பலில் 53 பணியாளர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பாலி தீவின் வடக்கு கடலில் திடீரென இந்த கப்பல் மூழ்கி மாயமாகியது.

இதனை அடுத்து சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா மீட்பு கப்பல் உதவியுடன் இந்தோனேசியா மாயமான தனது கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது. இதனையடுத்து கடந்த இருதினங்களுக்கு முன்பதாக கப்பல் இருக்கும் பகுதியை அடையாளம் கண்டுள்ளதாக அந்நாட்டின் தேடுதல் குழு தெரிவித்தது. காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும், நீரின் மேற்பரப்பில் எண்ணெய் காணப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மேலும் பல நாட்டு கடற்படையினரின் உதவியுடன் இந்த கப்பலை தேடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்த 53 பணியாளர்களை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 800 மீட்டர் ஆழத்தில் கப்பலின் உடைந்த பாகங்கள் ரோபோ உதவியுடன் இயக்கப்பட்ட கேமராக்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.