ரூ.4,108 கோடி அபராதம் வழங்க ஒப்புதல்;'எவர்கிவன்' கப்பலை விடுவித்த சூயஸ் கால்வாய் நிர்வாகம்..!

Approves Rs 4,108 crore fine; Suez Canal Management Releases 'Evergreen ship'

எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது.இந்த கால்வாயில் கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று பிற கப்பல்கள் செல்ல முடியாதபடி கால்வாயின் குறுக்காக தரை தட்டி நின்றது.

இதனால்,சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்தில் தடை ஏற்பட்டு, உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வார கால கடுமையான முயற்சிக்கு பின்னர் ‘எவர்கிவன்’ கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும்,கப்பல் தரை தட்டி நின்றதால் தங்களுக்கு பெரும் வர்த்தக இழப்பு ஏற்பட்டதாகவும்,அதற்காக சுமார் 916 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,836 கோடி) இழப்பீடாக வழங்கும் வரை கப்பலை விடமாட்டோம் என சூயஸ் கால்வாய் நிர்வாகம் ‘எவர்கிவன்’ கப்பல் உரிமையாளரான ஜப்பானை சேர்ந்த ஷோய் கிசென் கைஷாவிடம் கேட்டுக்கொண்டது.

இந்த காரணத்தினால்,கப்பல் சூயஸ் கால்வாய் அருகே உள்ள ‘கிரேட் பிட்டர்’ என்ற ஏரியில் பிணையாக பிடித்து வைக்கப்பட்டது.அதன்பின்னர்,பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இழப்பீட்டு தொகையை 550 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.4,108 கோடி) வரை சூயஸ் கால்வாய் நிர்வாகம் குறைத்து கொண்டது.

இந்நிலையில்,இழப்பீட்டு தொகையை வழங்க ‘எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷா ஒப்பு கொண்டு,அதற்கான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டார்.இதனால், ‘எவர்கிவன்’ கப்பலை 3 மாதங்களுக்குப் பிறகு சூயஸ் கால்வாய் நிர்வாகம் நேற்று முன்தினம் விடுவித்தது.

இதனைத் தொடர்ந்து,கப்பல் நெதர்லாந்தின் ராட்டர்டாமை நோக்கி தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.