‘புதின் போருக்கு தயாராகிறார்’…பேச்சுவார்த்தைக்கு முன் எச்சரிக்கை விட்ட அமெரிக்கா!
துருக்கியில் போர் நிறுத்தம் குறித்து 2-வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும் உக்ரைனும் தயாராக உள்ளன.

ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று, ஜூன் 2, 2025 அன்று இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளன. 2022-ல் தொடங்கிய அவர்களது போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இது இரு நாடுகளும் நேரடியாகப் பேசும் இரண்டாவது முயற்சியாகும். முதல் சுற்று பேச்சுவார்த்தை கடந்த மே 16, 2025 அன்று இதே இஸ்தான்புலில் நடந்தது.
அப்போது பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும், கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஒரு சிறிய ஒப்பந்தம் மட்டும் ஏற்பட்டது. ஆனால், இந்த முறை, துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹகன் ஃபிடான் பேச்சுவார்த்தைகளை வழிநடத்துகிறார், ரஷ்யாவின் பிரதிநிதி குழுவை விளாடிமிர் மெடின்ஸ்கியும், உக்ரைனின் குழுவை பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவும் தலைமையேற்கின்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு, உக்ரைனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் 30 நாள் முழுமையான போர் நிறுத்தத்தைக் கோரின. ஆனால், ரஷ்யா இதை ஏற்க மறுத்து, உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா ஆகிய பகுதிகளிலிருந்து உக்ரைன் படைகள் வெளியேற வேண்டும் என்று கோரியது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தக் கோரிக்கையை உக்ரைன் “முற்றிலும் ஏற்க முடியாதது” என்று நிராகரித்துள்ளது.
இதனையத்தொடர்ந்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நேரடியாகப் பேசத் தயார் என்று கூறியுள்ளார். ஆனால், புடின் இந்தப் பேச்சுவார்த்தைகளில் நேரடியாக பங்கேற்கவில்லை, இது பேச்சுவார்த்தைகளின் வெற்றிக்கு சவாலாக உள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரஷ்ய அதிபர் புடின், அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஒரு தந்திரமாகப் பயன்படுத்தி, மேலும் போருக்கு தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இரண்டு மூத்த செனட்டர்கள், Associated Press (AP) அறிக்கையின்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தாமதப்படுத்துவதாகவும், புதிய இராணுவத் தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் எச்சரித்தனர். விளாடிமிர் புதின், உக்ரைனுடன் அமைதியாக பேசுவது போல் காட்டிக்கொள்கிறார். ஆனால், உண்மையில் அவர் பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, மேலும் புதிய போர் தாக்குதல்களுக்கு தயாராகிறார் என்று எச்சரிக்கிறார்கள்.
இப்போது வரும் இரண்டு வாரங்கள் இந்தப் போரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இந்தப் போர் ஐரோப்பா நாடுகளின் பாதுகாப்புக்கு பெரிய பிரச்சினையை உருவாக்கலாம் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை, புதின் உண்மையில் அமைதி விரும்பவில்லை, மாறாக மேலும் போரைத் தொடர திட்டமிடுகிறார் என்று சொல்கிறது. இதனால், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வராமல், மேலும் தீவிரமாகலாம் என அஞ்சப்படுகிறது.