அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?
ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள அகமதாபாத்தில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது.

அகமதாபாத்: பெங்களூரு – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர மோடி மைதானத்திற்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்தச் சூழலில், அங்கு மழை பெய்து வருவதால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோப்பையை கைப்பற்றும் 18 ஆண்டுகள் கனவுடன் பெங்களூரு அணி களமிறங்கும் சூழலில் மழை குறுக்கிடுவது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. நேற்று முன் தினம், இதே மைதானத்தில் நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியை பாதித்தது. அந்த வகையில் இன்றும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அப்படியெனில் இரண்டாம் தகுதிக்சுற்றுபோல் கால இடைவெளி கழித்து மீண்டும் போட்டி நடைபெறும். ஒருவேளை மழை பெய்து ஆட்டம் ரத்தானால், அதையும் மீறி மழை தொடர்ந்தால் ஐபிஎல் விதிமுறையின்படி ரிசர்வ் டே அடிப்படையில்போட்டி நாளை நடத்தப்படும். ஆனால், நாளையும் மழை பெய்தால், லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற பஞ்சாப் அணிக்கே கோப்பை வழங்கப்படும். இதன் மூலம், பெங்களூரு வெறும் கையோடு ஊர் திரும்ப வேண்டியதுதான், 18 ஆண்டுகள் கனவும் கலைந்து போய்விடும்.
இந்த இரு அணிகள் இதுவரை நேருக்குநேர் மோதி தலா 18 போட்டிகளில் வென்றுள்ளன. ஐபிஎல் ஃபைனல் நடைபெறவுள்ள அகமதாபாத் மைதானத்தில் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. அதேநேரத்தில் ஆர்சிபி அணி 6-ல் விளையாடி 3-ல் தோல்வியை தழுவியுள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே 2 முறை பஞ்சாப்அணியை வென்றிருந்தாலும், இன்றைய போட்டி ஆர்சிபி-க்கு சவால்தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முதலில் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது. இதனையடுத்து, 2023-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அந்த ஸ்டேடியத்தில் 2-வதாக கோப்பையைக் கைப்பற்றியது. இந்நிலையில், 3-வதாக மோடி ஸ்டேடியத்தில் கோப்பையைத் தட்டித் தூக்கப்போவது யார் என்று இன்றைய போட்டியில் தெரிந்துவிடும். இதனால், பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதும் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.