வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு மேல் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 போர் விமானம் தொடர்பான நெருக்கடியின்போது, உதவியாளர்களிடம் “கடுமையாக கத்தினார்” என்றும், மீட்பு நடவடிக்கை திட்டமிடலின்போது அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இரு அமெரிக்க விமானிகள் காணாமல் போனதாக டிரம்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக “அவர்களைப் போய் மீட்டு வாருங்கள்” என்று இராணுவத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் ஈரானிய எல்லைக்குள் நுழைந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் சிக்கலானது என்பதால், உதவியாளர்கள் அவரை நிமிடத்துக்கு நிமிடம் நடைபெறும் திட்டமிடல் கூட்டங்களிலிருந்து விலக்கி வைத்தனர்.
WSJ-யின் அறிக்கையின்படி, டிரம்ப் பொறுமையின்றி இருந்ததால், அவரை முக்கியமான தருணங்களில் மட்டும் அழைத்து சுருக்கமாக விளக்கம் அளித்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த சம்பவம் 1979-ம் ஆண்டு ஈரான் பணயக் கைதிகள் நெருக்கடியை (ஜிம்மி கார்ட்டர் காலம்) டிரம்ப் நினைவூட்டியது.
அப்போது ஹெலிகாப்டர் மீட்பு முயற்சி தோல்வியடைந்து, கார்ட்டருக்கு தேர்தலில் தோல்வியை ஏற்படுத்தியதாக டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஒரு விமானி விரைவில் மீட்கப்பட்டார். மற்றொரு விமானி எதிரி எல்லைக்குள் 24 மணி நேரத்துக்கும் மேலாக இருந்த பிறகு, உயர் ஆபத்து நிறைந்த மீட்பு நடவடிக்கையில் மீட்கப்பட்டார்.
மீட்புக்குப் பிறகு டிரம்ப் சமூக ஊடகங்களில் வலுவான அறிக்கைகளை வெளியிட்டார். ஹார்முஸ் நீரிணை தொடர்பாக எச்சரிக்கையும் விடுத்தார். சில அறிக்கைகள் தேசிய பாதுகாப்புக் குழுவின் உள்ளீடு இல்லாமல் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.டிரம்ப் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சில சமயங்களில் அமெரிக்காவின் ஈடுபாட்டை ஆழப்படுத்த விரும்பவில்லை என்றும் மாறி மாறி நிலைப்பாடு எடுத்ததாக WSJ தெரிவித்துள்ளது.
ஈரானிய இலக்குகள் எத்தனை தாக்கப்பட்டன என்பதை உன்னிப்பாக கண்காணித்த அவர், அமெரிக்க விமானிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோது “மணிக்கணக்கில் உதவியாளர்களிடம் கத்தினார்” என்றும் அறிக்கை கூறுகிறது.இந்த நெருக்கடி அவருக்கு அரசியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் டிரம்பிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகை இந்த அறிக்கையை மறுத்து, டிரம்ப் “நெருக்கடியின் போது உறுதியான தலைவராக” இருந்ததாக பதில் அளித்துள்ளது.ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான மோதல் இன்னும் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடல் காரணமாக உலக எண்ணெய் சந்தை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
