தலிபான்கள் அமெரிக்க வீரர்களை தாக்கினால் பலத்த பதிலடி கொடுக்கப்படும் – அமெரிக்க அதிபர்!

US President Joe Biden has said he will retaliate if the Taliban attack US security personnel.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்களை தலிபான்கள் தாக்கினால் பலத்த பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் அச்சுறுத்தல் காரணமாக பிற நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்புபவர்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் அமெரிக்காவை சேர்ந்த வீரர்கள் விமான நிலையத்தில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் அமெரிக்கர்கள் மற்றும் தலிபான்களின் அச்சுறுத்தலால் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை பத்திரமாக வெளியேற்றுவதற்காக அமெரிக்க வீரர்கள் சென்றுள்ளதாகவும், அவர்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினாலோ அல்லது அவர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தாலோ அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பதிலடி லேசானதாக இருக்காது எனவும் பலத்த பதிலடியாக இருக்கும் என்பதை தலிபான்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொன்னதுபோல பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தீவிர கவனம் செலுத்துவோம், எதிர்காலத்தில் எங்களது மக்கள் மற்றும் ஆப்கான் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை கூட்டாக மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கான் விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தினை நடத்துவதற்காக ஜி-7 நாடுகளின் கூட்டம் அடுத்த வாரம் நடத்துவதற்கு அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.