இந்தியா வழங்கும் 50,000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்ல தனது அரசாங்கம் அனுமதிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்தில் நிறுவப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் இன்டர்-மினிஸ்டீரியல் ஒருங்கிணைப்பு பிரிவுக்கு (AICC) இன்று இம்ரான் கான் பயணம் செய்தார். முதல் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு இம்ரான் கான் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, இந்தியா வழங்கும் 50,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுமதிக்கும் பாகிஸ்தானின் முடிவை அறிவித்தார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் சென்று அங்கு சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் நோயாளிகள் திரும்புவதற்கு பாகிஸ்தான் வசதி செய்யும் என்று பிரதமர் அறிவித்தார்.
பல வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானுடனான வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 50,000 டன் கோதுமையை மனிதாபிமான உதவியாக வழங்க இந்தியா முன்வந்தது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் சாதகமாக பதிலளிக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் இஸ்லாமாபாத்துக்குச் சென்ற தலிபான் பிரதிநிதிகள் கூட, பாகிஸ்தானின் உயர்மட்டத் தலைமையிடம் கோதுமை ஏற்றுமதியை அனுமதிப்பது குறித்த பிரச்சினையை எழுப்பினர். இந்நிலையில், 50,000 டன் கோதுமை, அவசரகால மருத்துவப் பொருட்கள், குளிர்கால தங்குமிடங்கள் மற்றும் பிற பொருட்கள் உட்பட பாகிஸ்தானின் ரூ.5 பில்லியன் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை உடனடியாக அனுப்ப இம்ரான் கான் உத்தரவிட்டார்.
பாகிஸ்தானுக்கான முக்கிய ஆப்கானிய ஏற்றுமதிகள் மீதான கொள்கை ரீதியான வரி மற்றும் விற்பனை வரி குறைப்புக்கும் அவர் ஒப்புதல் அளித்தார். நில எல்லைகளில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழையும் அனைத்து ஆப்கானியர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு கான் உத்தரவிட்டார். ஆப்கானிஸ்தானியர்களுக்கு இலவச தடுப்பூசி போடுவதை பாகிஸ்தான் நவம்பர் 13ஆம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node