இஸ்ரேல் : இஸ்ரேல், லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள இரு நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. லெபனானுடன் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட நிலையிலும், ஹிஸ்புல்லா தரப்பில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள இரு இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏப்ரல் 24, 2026 வெள்ளிக்கிழமை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 16 அன்று அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறி, லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இதையடுத்து இஸ்ரேல் விமானப்படை உடனடியாக பதிலடி கொடுத்தது.
தாக்குதல் நடைபெற்ற இடங்கள் கெர்பெட் செலெம் (Kherbet Selem) மற்றும் தௌலின் (Touline) ஆகும். இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், அங்கு இருந்த ராணுவ அமைப்புகளை அழித்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் விமானப்படை விமானத்தை நோக்கி நிலத்திலிருந்து வானுக்கு ஏவும் ஏவுகணையை (surface-to-air missile) ஏவ முயன்றபோது, மூன்று ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக IDF கூறியுள்ளது.
