ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!
போர் நிறுத்தம் அறிவித்து 1 மணி நேரம் கூட முடியாத நிலையில் எப்படி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தலாம்? என டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தெஹ்ரானில் உள்ள ஈரானின் ஆட்சி மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து தீவிர வான்வழி தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு (IDF) உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இப்படியான சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம்சாட்டப்படும் சூழலில், இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
ஜூன் 24, 2025 அன்று தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், “இஸ்ரேல், குண்டுகளை வீச வேண்டாம். அவ்வாறு செய்தால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய மீறலாக இருக்கும். உங்கள் விமானிகளை உடனே திரும்ப அழைத்து வாருங்கள்!” என்று எச்சரித்தார். இதற்கு முன், ஜூன் 23, 2025 அன்று இரவு அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறி, இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
ட்ரம்ப், இஸ்ரேல் மற்றும் ஈரான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியதாகக் குற்றம்சாட்டி, இரு தரப்பு மீதும் அதிருப்தி தெரிவித்தார். நேட்டோ உச்சி மாநாட்டிற்காக ஹேக் செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஈரானுடன் மகிழ்ச்சியாக இல்லை, ஆனால் இஸ்ரேலுடன் மிகவும் மகிழ்ச்சியற்றவனாக இருக்கிறேன்.
ஈரான் முதலில் தொடங்கி இருந்தாலும், இஸ்ரேல் 12 மணி நேரத்திற்கு அமைதியாக இருந்திருக்க வேண்டும் போர் நிறுத்தம் அறிவித்து 1 மணி நேரம் கூட முடியாத நிலையில் எப்படி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தலாம்? இரு நாடுகளும் நீண்ட காலமாக சண்டை போட்டு வருகிறது. ஆனால், என்ன செய்கிறார்கள் என அவர்களுக்கே தெரியவில்லை” என்று கூறினார். இஸ்ரேல், ஈரானின் மீறலை அடுத்து தெஹ்ரான் அருகே ஒரு ரேடார் தளத்தை அழித்தது, ஆனால் ட்ரம்புடனான உரையாடலுக்குப் பின் மேலதிக தாக்குதல்களை நிறுத்தியதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்தது.
ஈரான், “நாங்கள் போர் நிறுத்தத்தை மீறவில்லை, இஸ்ரேலின் குற்றச்சாட்டு தவறானது,” என்று மறுத்து, இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். ட்ரம்ப், “போர் நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது, தயவு செய்து அதை மீற வேண்டாம்,” என்று வலியுறுத்தி, இரு நாடுகளையும் அமைதியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த மோதல், மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது. ட்ரம்பின் எச்சரிக்கை, இஸ்ரேலின் தாக்குதல்களை கட்டுப்படுத்த முயலும் அவரது முயற்சியை வெளிப்படுத்துகிறது. எனவே, அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது.