எச்சரிக்கை..! புகைப் பிடிப்பவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பும்;கொரோனாவால் மரணம் ஏற்படவும் 50 % வாய்ப்பு – WHO ..!

Smokers are 50% more likely to die from serious illness and corona infection, says WHO Director-General Dr. Tedros Adhanom Caprese

புகைபிடிப்பவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பு மற்றும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு ஏற்பட 50 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

புகைப்பிடிப்பவர்கள் சார்ஸ் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.ஏனெனில் புகைபிடிப்பதால், வைரஸானது கையிலிருந்து வாய்க்கு பரவி,அதன் மூலமாக மனித நுரையீரலை பாதிக்கிறது,எனவே,இதுபோன்ற எந்தவொரு புகையிலை தயாரிப்புகளையும் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அந்த வகையில்,உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் மற்றும் தலைமை மருத்துவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், புகைப்பிடிப்பவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்புகள் மற்றும் கொரோனா காரணமாக இறப்பதற்கு 50 சதவீதம் வரை அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.

மேலும்,WHO இன் ‘கமிட் டு க்விட்’ என்ற புகையிலைக்கு எதிரான பிரச்சாரம் குறித்த அறிக்கையில்,டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது, “புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று எளிதில் பரவும். அதுமட்டுமல்லாமல்,புற்றுநோய்,இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

அதனால்,உயிரிழப்பு ஏற்பட 50 சதவீதம் வரை அதிக வாய்ப்பு உள்ளது.எனவே,புகைபிடிப்பவர்கள் இந்த கொடிய கொரோனா வைரஸிலிருந்து தங்களுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள நினைத்தால் புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.

மேலும்,உலக சுகாதார அமைப்பின் பிரச்சாரத்தில் சேர்ந்து,புகையிலை இல்லாத சூழல்களை உருவாக்குவதற்கு,அனைத்து நாடுகளும் தங்களது பங்களிப்பை அளியுங்கள்”,என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து,புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக,’க்விட் சேலஞ்ச்’ என்ற முறையில், வாட்ஸ்-அப், வைபர்,பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வி-சாட் ஆகியவற்றின் மூலமாக ஆறு மாதங்களுக்கு அதற்கான உதவிக்குறிப்புகளை WHO வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.