“போர் விரைவில் முடியும்” – ஈரான் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை வார இறுதியில் நடைபெறக்கூடும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

Hero Image

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரு தரப்பும் இந்த வார இறுதியில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய நாம் மிகவும் நெருங்கிவிட்டோம். இஸ்லாமாபாத்தில் (பாகிஸ்தான்) அடுத்த சந்திப்பு இந்த வார இறுதியில் நடைபெறலாம். இரு வார போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது, ஏனென்றால் ஈரான் ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது” என்றார்.

மேலும் லாஸ் வேகஸில் பேசிய அவர், “ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும். இது மிக விரைவில் முடியும்” என்று தெரிவித்தார்.ஈரானுடனான 40 நாள் போர் நிறுத்தம் ஏப்ரல் 8 அன்று தொடங்கியது. இந்த இடைக்கால ஒப்பந்தம், லெபனான்-இஸ்ரேல் இடையேயான 10 நாள் போர் நிறுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டிரம்ப், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கு “தீ மூட்டாதீர்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரு தரப்பும் முதலில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடலாம் என்றும், அதன் பிறகு 60 நாட்களுக்குள் விரிவான ஒப்பந்தம் எட்டப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எண்ணெய் விலை குறைந்துள்ளது

ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கையால் சர்வதேச எண்ணெய் விலை குறைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 98.17 டாலராகவும், அமெரிக்க WTI 93.47 டாலராகவும் விற்பனையாகியுள்ளது.ஹார்மூஸ் நீரிணை முற்றுகை தொடர்கிறது இருப்பினும், ஹார்மூஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை முற்றுகை தொடர்கிறது. இது உலக எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஈரான் தனது கப்பல்களைத் தவிர மற்ற கப்பல்களுக்கு நீரிணையை மூடியுள்ளது.

லெபனான் போர் நிறுத்தம்

லெபனான்-இஸ்ரேல் இடையேயான 10 நாள் போர் நிறுத்தம் வியாழக்கிழமை நடைமுறைக்கு வந்தது. டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோருடன் பேசியதாகவும், விரைவில் வெள்ளை மாளிகையில் அவர்களை அழைத்து “அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை” நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

ஈரான் அணு ஆயுதத் திட்டம் முக்கிய தடையாக உள்ளது. அமெரிக்கா 20 ஆண்டுகள் அணு நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. ஈரான் 3 முதல் 5 ஆண்டுகள் வரை நிறுத்தலாம் என்று பதிலளித்துள்ளது.இருப்பினும், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தி வருவது மற்றும் ஹார்மூஸ் நீரிணை முற்றுகை ஆகியவை, போர் நிறுத்தத்தை உடையக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

டிரம்ப், “போர் முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். நாங்கள் இன்னும் முடிக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்துள்ளது. போர் நீடித்தால் உலகம் பொருளாதார மந்தநிலைக்கு தள்ளப்படும் என்று எச்சரித்துள்ளது.