பயங்கரவாதிகளை ஆதரிப்பதே பாகிஸ்தான் தான் – இந்தியா!

India has told the United Nations that the world knows openly that Pakistan has supported and harbored terrorists.

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்து, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததை உலக நாடுகள் வெளிப்படையாக அறியும் என ஐநா சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபைக் 76 ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி குறித்தும் பேசியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இந்திய முதன்மை செயலாளர் சினேகா தூபே அவர்கள், பாகிஸ்தான் பிரதமர் உலக அரங்கில் பொய்யான விஷயங்களை தூண்ட முயற்சிக்கிறார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் எப்போதும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருக்கும் எனவும், பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து பகுதிகளையும் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீண்ட காலமாகவே பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, இந்தியா மீது தாக்குதல் நடத்தும் செயலில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதும், அவர்களுக்கு நிதியுதவி அளிப்பதும் தான் பாகிஸ்தான் அரசின் கொள்கையாக இருப்பதை உலக நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், அண்டை நாடுகளுக்கு மட்டும் தீங்கு விளைவிக்கும் என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகளை அவர்களின் கொல்லைப்புறத்தில் பாகிஸ்தான் வளர்ப்பதோடு, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளும் பாகிஸ்தான் அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.