உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் – பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்!

A state of emergency has been declared in Ukraine amid the threat of war in Russia.

ரஷ்யாவுன் போர் அபாயம் நிலவி வரும் நிலையில் உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுக்க பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி கரம் நீட்ட, ரஷ்யா நேரடியாக போர் தொடுக்காமல் குறுக்கு வழியை கையாண்டு வருகிறது. ஒருபுறம் உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்த ரஷ்யா, மறுபுறம் கிளர்ச்சிப் படையை வைத்து உள்நாட்டில் துப்பாக்கி சூடு நடத்தி உக்ரைனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், கிளர்ச்சிப்படை ஆக்கிரமித்த கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 பிராந்தியங்ளை தனி சுதந்திர நாடாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். கிளர்ச்சிப்படை ஆக்கிரமித்த பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதாக கூறி அங்கு ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. தனி நாடாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு அமெரிக்கா உடனடியாக பொருளாதார தடை விதித்தது.

உக்ரைன் நாட்டை தம் வசமப்படுத்த ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஊடுருவி வருகிறது. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் இருந்து தூதரக அதிகாரிகளை விரைவில் வெளியேற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தும் திட்டங்களுக்கு உக்ரைனின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா துருப்புகளை அதிகரித்துவரும் நிலையில் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

போர் சூழ்ந்துள்ளதால் அவசர நிலையை உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ரஷ்ய படைகள் எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டு எல்லைக்குள் நுழையலாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உக்ரைனிலிருந்து பிரிந்து இருக்கும் டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து, அவசரகால  பிரகடனம் நாடு முழுவதும் பொருந்தும். இந்த உத்தரவு 30 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் அதன்பின் நீடிக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.