தங்களின் கனவை ரஷ்யாவால் ஒருபோதும் அழிக்க முடியாது என்று உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்வீட்.
உக்ரைன் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதை தொடர்ந்து, ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் தாக்கி வருகிறது. இந்த இடைவிடாத தாக்குதல் உக்ரைனின் முக்கிய நகரங்களைச் சுற்றியும் நடைபெற்று வருகிறது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் அருகே ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. அதற்கு உக்ரைனும் முடிந்த வரை பதிலடி கொடுத்து வருகிறது.
இதில் ராணுவ தளங்கள், விமான தளங்கள் என ரஷ்யா படைகளால் அழிக்கப்பட்டு வருகிறது. பதிலுக்கு ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி வருகிறது உக்ரைன் . இந்த நிலையில், உக்ரைனில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானம் ரஷ்யாவால் அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். antonov என்ற உக்ரைன் விமானம் நிறுவனம் உருவாக்கிய உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் AN-225 ‘Mriya’ என்பதாகும்.
இந்த விமானம் தலைநகர் கீவிற்கு அருகே உள்ள கோஷ்டமல் விமான நிலையத்தில் இருந்தபோது, ரஷ்ய ராணுவத்தின் வான்வெளி தாக்குதலால் அழிக்கப்பட்டதாக கூறியுள்ளார். இந்த விமானம் கடந்த 1985-ஆம் ஆண்டு உக்ரைனின் antonov விமானம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 30 சக்கரங்கள், 6 இன்ஜின்கள், 290 அடி இறக்கைகளுடன் தயாரிக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் என்ற சிறப்பை பெற்றது. சரக்கை ஏற்றுக் கொண்ட இந்த விமானத்தால் 4,500 கிமீ வரை செல்ல முடியும்.
உக்ரைனின் கனவு விமானம் என்று பொருள்படும் இந்த விமானத்தை ரஷ்ய ரவுகணைகள் தாக்கியதில் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், தங்களின் AN-225 ‘Mriya’ விமானத்தை ரஷ்யா அழித்திருக்கலாம், ஆனால் வலுவான ஜனநாயகமான, சுதந்திரமான ஐரோப்பிய நாடாக விளங்குவது குறித்து தங்களின் கனவை ரஷ்யாவால் ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் நாங்கள் வெல்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கனவு என்று பொருள்படும் உக்ரைனின் மிரியா விமானத்தை மீண்டும் உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
unknown node