#BREAKING : பாமக தலைவர் அன்புமணி கைது...! வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிசூடு...!

In Cuddalore, while a protest was being held under the leadership of BAMA leader Anbumani Ramadoss, BAMA leader Anbumani Ramadoss was arrested.

Anbumani ramadoss

கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போரட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கியுள்ள நிலையில்,  சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி  நடைபெற்று வருகிறது.

என்எல்சி நிர்வாகத்தின்  நடவடிக்கைக்கு அரசியல்  தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருவதோடு, போராட்டத்திலும் ஈடுபட்டு  வருகின்றனர். இந்த நிலையில், விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இன்று காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போரட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த  போராட்டத்தின் போது பாமகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டனர். அன்புமணி ராமதாஸை விடுவிக்கக்கோரி பாமகவினர் அந்த பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பாமகவினர் காவல்துறை வாகனத்தை கற்களை வீசி தாக்கியத்தில், வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டாக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனர். இந்த கல்வீச்சு சம்பவத்தால் சில போலிஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, வாஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும்,  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், தற்போது வன்முறையாக மாறியதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.