திமுக – காங்கிரஸ் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – பொன்ராதா கிருஷ்ணன்

நீட் தேர்வை திணித்தது காங்கிரசும், திமுகவும் தான். திமுகவும் காங்கிரசும் இதைவிட பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு செய்துவிட முடியாது என பொன்ராதாகிருஷ்ணன் பேட்டி.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்திய சுயசார்பு பாரதம் குறித்த காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வு எப்படி வந்தது என்பதும், யார் கொண்டு வந்தார்கள் என்பதும் அனைவருக்குமே தெரியும். மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது தமிழகத்துக்கு எதிரானது என தற்போது திமுகவினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இது மாணவர்களுக்கு எதிரானது என்று தெரிந்தும் நீட் தேர்வை திணித்தது காங்கிரசும், திமுகவும் தான். திமுகவும் காங்கிரசும் இதைவிட பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு செய்துவிட முடியாது. எனவே இந்த இரண்டு கட்சிகளும் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.