காவல்துறையினருக்கே இந்த கதி என்றால், மற்ற பெண்களின் நிலை என்ன ஆகும்? என டிடிவி தினகரன் ட்விட்
சென்னையில் தி.மு.க பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த பெண் காவலருக்கு அக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் அவர்கள் ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘சென்னையில் தி.மு.க பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த பெண் காவலருக்கு அக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் காவலர் கதறி அழுதும் மனமிறங்காத வக்கிர புத்தி கொண்டவர்களாக ஆளும் தி.மு.க.வினர் நடந்து கொண்டதாகவும், அவர்களைக் கைது செய்யவிடாமல் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதாகவும் வரும் செய்திகள் மேலும் அதிர்ச்சியளிக்கிறது.
எந்தக் காலத்திலும் தி.மு.க.வினர் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். காவல்துறையினருக்கே இந்த கதி என்றால், மற்ற பெண்களின் நிலை என்ன ஆகும்? இதற்கு தி.மு.க.வின் தலைவரும், இளைஞர் அணி செயலாளரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.