#ElectionBreaking: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.!

The Communist Party of India in the DMK alliance has signed an agreement on the constituencies to be contested in the elections.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதை குறித்து திமுக – சிபிஐ பேச்சுவார்த்தை தொடர்ந்து இருமுறை நடைபெற்றது. திமுக கூட்டணியில் சில விருப்பமான தொகுதிகளை கேட்டு சிபிஐ குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதில், திருத்துறைப்பூண்டி, தளி போன்ற விருப்பமான தொகுதிகள் கிடைக்காத நிலையில், நேற்று ஒரே நாளில் 2வது முறை திமுகவுடன் சிபிஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது திமுக கூட்டணியில் சிபிஐ போட்டியிடும் தொகுதிகளின் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று நோக்கத்துடன் கடந்த 5ம் தேதி 6 தொகுதிகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். அதேபோன்று இன்றைக்கு 6 தொகுதிகளை அடையாளம் கண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி, கோவை மாவட்டம் வால்பாறை, சிவகங்கை, திருப்பூர் வடக்கு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனி தொகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஆகிய 6 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node